Sunday, March 01, 2009

ஈழத் தாயின் கேள்வி

என்றெனக்கு ஒரு விடியல் - மகளே
என்றெனக்கு ஒரு விடியல்?
இன்றைக்கு நாளைக்கென எனை - மிக
ஏமாற்றியே காலம் கழித்தாய்.
சண்டைக்குப் போன கரும் புலிகளின்
சாம்பலை அள்ளீக் கொணர்ந்தாய்
கன்றுகளைக் காவு கொடுத்து- என்
கருவறையில் கல்லறைகளாக்கினாய்
இன்றைக்குமது எண்ணம் மாறியதேனோ?- ஏன்
இப்படித் துவண்டு போனாய்?

வீர மரணமென்றெண்ணி -ஒவ்வொரு சாவிலு
மென் வயிற்றுக் கொதிப்படக்கினேன்
போராட்ட வரலாறில் உயிர் போவது
சகஜமென்று துயர் தட்டிக் கழுவினேன்
சாதாரணமாய் சமாதானமாகிவிடுவாயென்றால் - என்
தங்கங்களையா காவு கொடுத்தேன்?
தோராயமா யவர் கொடுப்பதை வாங்கி வர - என்
சுதந்திரமென்ன பிச்சையா எனக்கிங்கு?

இப்படியே..!

சுதந்திரத்திற்கான தவமொன்றில்
இங்கு
மரணித்தல் வரம்;
மண் சுமந்த மேனிகளை
இங்கு
மண் சுமக்கிறது.
நிதானிக்கின்ற நேரங்கள் கூட
எதிரிகளுக்கு அவகாசம்...
ஒரு வகையில்;
இடை வேளைகள் வைக்காமல்
தொடர்கின்ற போராட்டங்கள்
தொடக்கி வைக்கின்ற
முனைப்புகள் நிறைத்து
உணர்வுகள் சுண்டி விட்ட
எலும்புக் கூடுகளில் உயிர்கள் வைத்து,
எழுந்து நிற்கிறது;
எந் நேரமும் ...
எதற்காகவும்..
தயாராகி...வரிசை..
எங்கள் எல்லைகள் நிரப்பி...!

கரும் புலி

உன்
மரண வீட்டில்
இறுதி மரியாதைக்கு
பூத உடல் இல்லை,
அந்திரேட்டிக்கு மட்டும்
அள்ளித் தந்தனர்
உன் சாம்பலை...!

சண்டை போடும் சமரில்
நம்பிக்கையில்லை,
உனக்கு!
சாவை மட்டும் தான்
நம்பிப் போகிறாய்
சமரென்று!

உன் கல்லறையில்
புதைத்து வைக்க
ஒரு எலும்ம்புத் துண்டாவது
கிடைக்குமா?
இரு;
பூவா தலையா
போட்டுப் பார்க்கிறேன்..!

திருப்பள்ளியெழுச்சி!

பொழுது புலர்ந்தது; யான் செய்த பாவத்தால்
துன்பவிருட் கணம் சேர்ந்தன யாவும்.
கொடுந் துயர் தீ யெனப் பரவியெங் கணும்
சூழ்ந்து பரவியது அடிமைத் தளர்;
தொழுதுனை இரஞ்சி யிங்கே வரம் கேட்டிங்கு
தமிழன்னையுன் காலடியில் நிற்கிறேன்
மூடத்துயில் கொள்கின்றனையென் மகவே -சோதித்
திருவிழி திறந்தொரு பள்ளியெழுந்தருளாயே!

புள்ளினம் பறந்தன என் தேசத்தி லாங்கஅன்றொரு
காலம் புரவிகள் மேய்ந்தன புல் வெளிகள்
மெல்லனவே யென் காதுகளில ப்போதியைந்திட
மேள தாளங்களி சைத்தன இணந்தொடு
பன்னெடுங் காலங்களாய் மகனே- ஈங்கந்தப்
பரவசங்க ளெனக்கில்லை துயரன்றி
செல்லடிகளால் செவிடனுமானாயோ நீ,
சிந்தகளின்றி யுன் செயல் திறன் மறந்தனையோ
நன் முத்தே நவ மணியே நன்கு விழித்தெழுவாய்,
உன் நாடு மீளவே யொரு பள்ளியெழுந்தருளாயே

தமிழீழத்தின் அநேகமான பெண்களில் ஒருத்தி..!

நான்
ஐவருக்கு மாலையிடவில்லை;
ஆனாலும்
துகிலுரியப்பட்டேன்.
எங்களூரின்
மஹாயுத்தத்தின் பின்னால்
என்னைப் போல்
நிறையத் திரௌபதைகள்,
சபதங்கள் நிறைவேற்றவென்று
காத்திருக்கிறார்கள்.
ஆனால்
எங்கள் தர்மர்கள்
மீண்டும் ஒரு முறை....
துரியோதனனின் பகடை
மயக்கத்தில்....!
எதிரணியில் ...
துரோணர்களூம் , பீஷ்மர்களும்
அங்கில்லை...
கர்ணனும் , அஸ்வத்தாமனும்
வரவில்லை...
வெறும்
எட்டப்பனும், சகுனிகளும்
தான்
கைகேகியின் கட்டளைகளுடன்...!

(இது எழுதப்பட்ட நாள் மார்கழி 18 2001).

போதுமென்றா துயின்றாய்?

போதுமென்றா துயின்றாய்?
போதுமென்றா துயின்றாய்?
போதுமென்றா துயின்றாய்?- மரணமே
போதுமென்றா துயி்ன்றாய்? (மகனே!)

***************
உன் சாதி சனமிங்கு நாயிலுமீனமாய்
சாவது கண்டு மனந் துவண்டு மரணமே
போதுமென்றா துயின்றாய்? - மகனே!
போதுமென்றா துயினிறாய்?

********
வீதிகளில் தமிழச்சிகள் மானமிங்கு
வீணர்களால் துகிலுரிவதை
பாவியுயிர் தரித்துப் பார்த்திருபேனோ
சீயென்று மனம் கனன்று
கேவியழ ஆண்மை மறுத்து களத்தில்
உயிர் துறத்தல் மிகச் சிறப்பென்று..
நெஞ்சில் தாய் நானிருந்தும் -மகனே
மரணமே போதுமென்றா துயின்றாய்?
********
உயிர் தூசு சுமந்த தேகம் வெற்றில்
மாசு மறுவாய் கனத்ததுவோ?
பயிர் மேய்ந்த வேலி தனைக் கண்டு
கூசி யுள்ளம் உடைந்ததோ?
தளிர் பாலர் பலுரும் போரில் தமை
வீசி உயிர் கொடுத்தும்
போர் வேறு திசை சென்றதில்- மகனே
மரணமே போதுமென்றா துயின்றாய்?

அம்மாவுக்கு..!

அம்மா!
உன் மணிவயிற்றினுள்
தொப்புள் கொடி கட்டி வைத்த
உன் மகன்
இன்றுநாட்டின் தேசியக் கொடிக்காய்
தமிழன்னையின்
மண் வயிற்றில் புகுந்து கொள்கிறேன்.
என் வரவுக்காகவாசல்கள் திறந்து வை!
சமயத்தில்
உன் சேமிப்ப்பிலும்
கொஞ்சம்சேர்த்து வை!
என் சாவு வீட்டுக்கு!!

Sunday, March 16, 2008

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008

அன்புடன் நண்பர்களுக்கு!

வணக்கம்!

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்
பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது.

இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு
கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின்
வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும
உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.

வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை
பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

  1. சிறுகதை
  2. கவிதை
  3. கட்டுரை
  4. நகைச்சுவை துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.
  • ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் *சொந்தக் கற்பனையில்* படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
  • வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
  • *ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.*
  • போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி *2008 ம் ஆண்டு மே 31ம் திகதி*.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:

  • - 1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.
  • 2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய

ரூபாயும் வழங்கப்படும்.

  • பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில்பிரசுரமாகும்.

சிறுகதை:


  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.
  • ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • நடுவர்களின் முடிவே இறுதியானது.

கட்டுரை:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம்.
  • ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.


கட்டுரைகளுக்கான தலைப்புகள் :
  1. பெண்ணியம்.
  2. உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.
  3. தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.
  4. உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?
  5. ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.
  6. அரசியலில் பொது மக்களின் பங்கு.
  7. இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?
  8. இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'
  9. மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?
  10. கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப்படுத்தவல்லது?
  11. தியானம் என்பது....!


நகைச்சுவைத் துணுக்கு:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
  • ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.


கவிதை:

கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.

1. மரபுக் கவிதை.
2. புதுக்கவிதை

ஒவ்வொரு பிரிவிலும்

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • 1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
  • 2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து
கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக்
குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து
இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு
சமர்பிக்கப்படும்.

எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் *Thamizmakal@gmail.com *என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.

இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை
தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக
முக்கியம்.

இந்த இலக்கியப் போட்டிகளை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக குழும
உறுப்பினர்களும், நண்பர்களும் இவ் இலக்கியப் போட்டி அறிவித்தலை தத்தமது
வலைப்பூக்களிலும் , வலைத்தளத்திலும் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.
நன்றி !
வணக்கம்!!

Saturday, December 29, 2007

விடிவெள்ளிக்கு ஒரு வாழ்த்து!

விடியலை பார்த்திருந்தோம்...
விடி வெள்ளியாக வேங்கை வந்தான்!
கொடியவர் கையில் குலையுண்டோம்..
தமிழீழக் கொடியுடன்
தானைத் தலைவன் வந்தான்!

செந்நீருடன் கண்ணீரும் சிவப்பாய்
உப்பளங்களாய் உள்ளங்களும் வெடித்து
சிதறிய தசை முண்டங்களாய்
தமிழினம் தெருவில் சிதைய
பந்தாடிய கொடியவர் தலைகளை
கொத்தாக கொய்து போட
எங்கள் குல வீரன் வந்தான்!

மறவன் இனம் மாறாது குணம்
தீயும் காற்றும் சேர்ந்த வீரம்
சீறும் புலியின் பாயும் வேகம்
சிங்களமே நடுங்கும் தீரம்..
பேரம் பேசி முடக்க நினைத்தார்
ஒரு பேடியா இவன் அடங்கிப் போக..?
கோரம் காட்டி குதற முனந்தார்
ஒரு கோழையோ ஒதுங்கிப் போக?
நீசம் செய்த இனம் நடுங்க
நேசன் நிமிர்ந்து வந்தான்
விஸ்வரூம பொங்க...
பேசப் பேச இனியது தமிழ்..
இவனால்
இன்று உலகையே பேச வைத்தது
தமிழ்!

கூனிக் குறுகி இரோம் -இனி
இவன் கையில் கொடுத்தோம் எமை
கூடியொரு நாள் நாமும்
கும்மி கொட்டுவோம் எம் மண்ணில்
வீரன் பெற்ற விடுதலையை
குரவை கூட்டி பண்ணிசையில்..

அந்த நாளும் வாராதோ?
அக்கணம் வரை என்னுயிர் தரியாதோ?
சிந்திய என் சோதரர் குருதியின் ஈடாய்
எம் தேசத்தின் தலைவன் தரும் ஈழம்
இன்பமாய் ஒரு கணம் நுகர
அந்த நாளும் வாரதோ?
அக் கணம் வரை என்னுயிர் தரியாதோ?


*************************

எம் தாய்மண்ணின் மானம் காக்க களம் நடத்தும்
நம் தானைத் தலைவனுக்கு
என் மனம் குவிந்த , மனம் குளிர்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை
சமர்ப்பிக்கும் முகமாக 26.11.2007ல் எழுதப்பட்டது.

தேசக் குரலுக்கு ஓர் அஞ்சலி!

கோடி களில் தவழ்ந்திருக்கலாம் -
கோட்டு சூட்டோடு வாழ்ந்திருக்கலாம்.
சோடித்த கதை சொல்லி
செவ்வனவே...ஒரு தேசத்தில்
புகலிடமும் பிடித்திருக்கலாம்.
செய்தாயா நீ?

நூல்கள் எழுதின விரல்கள்
நூதனமாய் விளைந்த சிந்தனை துளிகள்.
ஆயுதங்கள் புழங்கிய கைகளுடன்
மிதவாதங்கள் புகுத்தப்பட்ட அறிவு புலனுடன்
சோதரனை நிமிர்த்திவிட்டாய்...!
புது வழியினை செப்பனிட்டாய்!
கடைசிவரை இருந்தாயா நீ?

நோயுடன் போராடினாய்.
ஒவ்வொரு தமிழனின் முதுகெலும்பிலும்
சுதந்திர கணத்தாக்கம்
தருவிக்கவும் போராடினாய்.
தடைகள் போட்ட எதிரியுடனும் போராட்டம்.
தமிழன் தகுதி உணர்த்த தரணி முழுவதுடனும் போராட்டம்..
தனித்து ஒரு நிமிடமேனும்
ஆசுவாசம் கண்டாயா நீ?

காதலுக்கு கட்டுண்ட கல்யாணமா?
கொள்கைகளால் கட்டப்பட்ட கல்யாணமா?
பாதிக்குப் பாதி உன் பாவையுமல்லவா
கை கோர்ர்த்தாள்..கதை எழுதினாள்....
பல்லக்கில் நீ புறப்பட்ட உலாவின் பின்
உன் பாரியாளின் தனிமைக்கேனும்
கொல்ல வந்த காலனிடம் கோவித்தாயா நீ?

மெல்லக் கண்மூடியதும் ஏன்?
மேதினியில் ஈழம் பார்க்க
மேல் உலகம் தான் வசதியோ?
சொல்லாமல் செல்கின்றாரே சோதரர்,
சேர்வையில் ஒன்றாக சேர்ந்தையோ?
பொல்லாத கோபம் அண்ணா உன்னுடன்
வெல்லாத இந்த நீசர்களுக்கு பதிலளிக்க
வேளைகளில் நீயில்லையென.!.
கல்லாகிப் போன காலனுக்கும் அறிவில்லை
கடைசி வரை இருந்தாயா நீ?

தேசத்தின் குரல் தேங்கி விட்டது.
எங்கள் குரல் நாண்களில் கேவல்கள் மட்டும் மிச்சமாய்..
ஆசுவாசம் கேட்கிறோம்;
ஆர்பரிக்கும் மன உளைச்சலிடம்..
நேசமான உன் முகம் மனதில்
நினைவுகளும் பொதி சுமைகள்
வீசிடும் தமிழ் காற்றில் விறைப்பாய் தெரிவதென்ன?
உன் மூச்சா?

திரிகள் அகல்களுக்குள் கட்டுண்டு...
ஜோதி மட்டும் வெளியில் பரவும்.
பூவுடல் மண்ணுக்குள் மட்டும்
பாலா அண்ணன் ஆத்துமா ஈழத்தின் வாய்மண்டல்த்துள்...
வானம் பார்த்த பூமியில் வாடிய பயிர்கள் நாம்
மாரி கொட்டும் எம் விழிகள்
மறைந்துவிட்ட சூரியனுக்காய்..
பாடல்கள் படையல் வைத்தோம்
தேசத்தின் குரலுக்காக...
கேட்கிறாதா சொர்க்கத்தில்....?


அண்ணாவுக்கு அஞ்சலிகள்...இலட்சங்களில் ஒன்றாக...இதுவும்.

தேசக் குரல் அண்ணன் பாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்காக எழுதியது.

Saturday, April 28, 2007

தமிழீழப் பெருமை

தமிழீழப் பெருமை
மா கடல் வலம் சூழ் கொள வங்கோர்
வரி சங்கொப்ப வோர் நேர் தீவு
சூல் கொண்டிங்குற்று நல் சுயம்பு
கடல் வரி வெட்டி தனி யொத்த
கோல் கொண்டோச்சிய முத்தமிழ் செல்வம்
தட வரியிங்குண்டாம் தனியி
லோர் தழலிங்கு வோர்போதில் பற்றிய கதையாம்
பகருமவர் நவமணிப் பரலீது காணீர்
*************
பால் முலயூற்றிய கையொடு மகவு வாயில்
தமிழ் முலையூட்டிய தாய் வளர்ப்பில்
சீலொடு செம்மையுற சேர் வளம் கொழிக்க
ஏரொடு வேரும் பல் தொழில் சிறந்து
மாலொடும் பிரானும் மனையாட்சி செய்த
மண்ணின் மகிமை கொணர்ந்து
சொற்பாவொடு பாரெங்கும் பரந்து விரி
புகழ்கேளீரிந்த வைடூரியப் பரலீது காண்.
*************
மூவர் வாய் பண்ணிற் கருவாய்
முத்தமிழ் சேர் முடிஹ்ரக் கனியாய்
போவோர் வந்தோர் வணிகக் கரையாய்
போதொடு நெல் சுமந்த மண்ணாய்
வீரர் படையும் விவேகம் கண்ட பண்டிதமும்
நேரொடு நெடுகிய சரிதங்களவைதனை
நீளூரைக்க வோரங்கம் போதிலையென்ன
சோர்விலசொல்ல கோமேதகப்பரலீது தான் காண்!
*************
செங்களனி நாற்று சேற்றில் புதையவெம்
தீற்றிய செம்மண் திட்டியினீராரம்
பரண் நிரப்பிய தங்கம் தகதகத்த நெல்மணி
வங்கம் வரை விரிந்த வயலொடு
பொங்கு தமிழ் மணம் சிறக்கவங்கெலாம்
பொழு தொன்றும் சோர்விலா
செங்கையறு சீரொடு சிறப்பும் சொல
பாங்கினிய பாடும் பவளப் பரலீது காண்
*************
கரை தட்டிய நுரையெலாமங்கு மகரம்
வரை கட்டிய நீரிலுப்பு விளைய
திரையலை கீழாழம் நுகர்ந்து மூச்சடக்கிக்கொணர்
தோராயமாய் குவியல்களில் முத்து
வ்ரிசங்கு வல மிடம் புரியொடு
பரண் நிரப்பிய பவளமொடு செல்வம்
தரை புரண்டோடிய தங்கத் தமிழ் திரு நாடாம்
புகழ் பாடும் முத்துப் பரலீது காண்!
*************
சென்றிரவு இருள் லொரு பொழுது கழியுறு முன்
செம்படவர் வலை சுமந்தேகும்
பாங்கில்வெண்ணிலவு முகில் போர்வையில் முயங்க
பனிதுகளி குளிர்காய்ந்தொழுகு மோர்
அங்கிலக்கில் ஆரவாரமா ஏலேலோக்களொலியில்
செங்கொண்டைச் சேவலும் துயிலெழும்
சங்கதியிங்கு சாங்கியமானதொரு சரிதமென
பாங்கினிலினிய பாடிடும் மாணிக்கப் பரலிது காண்!
*************
மூச்சடைத்து முயங்கி முக்குளித்த மூவாயிரத்தி
லோர் சிப்பியில் முத்தெடுத்தொத்த
சொல்லெடுத்து கோர்த்த கருவுரு கொடுக்க
மையெடுத்துப் போதிலையென்று மருகி
கடல் நீலம் கண்டெடுத்தும் காணான்
களித்திலையெனில் விண்ணேகி தான்
கருமுகில் சாறெடுத்து வந்து சாற்றிய
தமிழீழப் பெருமையாய் வைரத்துப் பரலீது காண்!
*************

Friday, February 23, 2007

  • Better by far you should forget and smile than that you should remember and be sad.
  • All I have seen teaches me to trust the Creator for all I have not seen

Thursday, February 22, 2007

மக்கள்

நாங்கள் வித்தியாசமானவர்கள்
அப்போதும்.........இப்போதுமாய்
இரண்டு நிலை வேறுபாடுகளிலும்.

பேசத் தெரிந்தவர்களாயிருந்தோம்
பேசத் தெரிந்தவர்களிடம்
ஏமாந்திருந்தோம்
ஏமாறத் தெரிந்தவர்களை
ஏமாற்றியிருந்தோம்...
நாங்கள் தமிழர்கள்!

ஒரு காலத்தில்...
எங்களுக்கும் காதல் பருவங்கள்
முக்கியத்துவமாயிருந்தன...
காத்திருத்தலும்...கைவிடப்படலுமாய்....!
அப்போதெல்லாம்.
காதலர்களுக்கு ஓடிப் போகவென்று
நிறைய தேசப் பரப்பிருந்தது...!
அல்லாமல்
காதலுக்காக
தற்கொலை செய்யவென்று
"பொலிடோல்" விற்க
நிறையக் கடைகளுமிருந்தன...!

இன்றும்
நாங்கள் ஓடுகின்றோம்.
விஷங்களை விழுங்குகின்றோம்.
வேறுபட்ட நிலைப்பாடுகளில்
வித்தியாசப் பட்ட பிரஜைகளாய்!

உறைக்கவில்லை ஒரு காலத்தில்
தேசத்தின் சொந்தப் பிரஜைகள்
அடிமைப்படுத்தலுக்குள்
அடங்கிப் போனது!
கனமான இடி முழக்கங்களோடு
புது வகையில் மின்ன்னல் பாய்ச்சி.....
எங்களுக்குள்
உணர்வு மழை பெய்ய
நிறையக் காலங்களெடுத்தது!

Sunday, February 18, 2007

தேசம்

பார்.
தென்றல் வீசிய தேசமொன்றில்
இன்று சூனியம் சும்மா கொட்டிக் கிடக்கிறது!
வேதம் ஓதிய தெருக்களில்
ஒப்பாரி ஓலங்கள் கேட்கிறது..
பாடை கட்டல்
தினசரி காலைக் கடனாகியது...
இன்று
சாவு தாண்டி வீடு வந்தால்
கின்னஸ் சாதனை தானது!

இதோ
என் தேசத்தின் ஒரு பிடி மண்
நுகர்ந்து பார்!
இரசாயனக் கலவை கலந்துழுத
மண்ணில்
இரத்த வாசனை தெரிகிறதா?

அதோ.... அங்கே...
சின்னச் சிசு நிலத்திலறைந்து
பெரிய பெரிய சங்கிலி வாகனம்;
அப்பால்
ஆகாயத்திலிருந்தும் துப்பாக்கி மழை;
நெற்றிக்கு முன் பச்சைத் தொப்பி
குறிவைத்துச் சுட்ட உடல்கள்
உயிர் துப்பி..;
இரத்த ஆற்றில்
இன வெறியின் வேளாண்மை.!

அறுத்தெடுத்த பெண்ணின் முலையில்
பிதுங்கும் இரத்தம்;
கற்பு கனரக ஆயுதத்திற்கு முன்
அற்ப்பமாய்...சும்மா..;
வியாகூலங்களின் விறைப்பில்
எங்கள் உயிர்க் கோட்டில்
குறி வைக்க கோடிச் செலவில்
ஆயுதங்கள்;

சிறையெடுத்து வெறியினமொன்று
எங்கள் சீதைகளைச் சீரழிக்கிறது..!
சீதை கூட
ஒரு தடவை தான்
தீக் குளித்தாள்...
ஆனால்
எங்கள் தேச மாதாவோ
தினசரி தீக்கிரையாகிறாள்!

மேற்படி காலங்களில்
எங்களூரின் மயானங்களில் கூட
பூந்தோட்டங்கள் வைத்திருந்தோம்..
இன்று
எங்கள் பூங்காவனங்கள்
மயானங்களாய்.... சாம்பராகி.....


கீறிய தேசப் பரப்பின் எல்லைக் கோடு
தெளிவாக்கப் படவென்று
பூகம்பங்களோடு.... எரிமலைகளுமாய்
உயிர்கள். குடித்து
துயரமளிக்கும் தேசம்...!

உன்னதமான கலாச்சாரமொன்றைக்
காவு வாங்கிய
சாத்திய கூறுகள் கொண்டு
எங்கள் தேசமிங்கு
நிர்வாணப்படுத்தலில் நிர்மூலமாகியதற்கு
அரை நூற்றாண்டுக் கதையிருக்கிறது...!

கட்டடங்கள் தரை மட்டமாக்கி
இந்த மண்ணில்
சில செத்த வீடுகள் நடத்தி
தேசம் அழித்து விட்டதாய்
ஒரு சாராரின் பகல் கனவொன்று
நடை முரையில் இருப்பதாய்
கேள்வி!

ஆனால்....இங்கு
எத்தனை முறை வேண்டுமெனிலும்
இத் தேசத்தின் சுயம்
கட்டியெழுப்பவென்று
திருப்பணிகள் அமுலில் வைத்த
சமுதாயமொன்று நடத்துகிறது
விழிப்புணர்வில்
ஒரு வேள்வி...!