Saturday, December 29, 2007

விடிவெள்ளிக்கு ஒரு வாழ்த்து!

விடியலை பார்த்திருந்தோம்...
விடி வெள்ளியாக வேங்கை வந்தான்!
கொடியவர் கையில் குலையுண்டோம்..
தமிழீழக் கொடியுடன்
தானைத் தலைவன் வந்தான்!

செந்நீருடன் கண்ணீரும் சிவப்பாய்
உப்பளங்களாய் உள்ளங்களும் வெடித்து
சிதறிய தசை முண்டங்களாய்
தமிழினம் தெருவில் சிதைய
பந்தாடிய கொடியவர் தலைகளை
கொத்தாக கொய்து போட
எங்கள் குல வீரன் வந்தான்!

மறவன் இனம் மாறாது குணம்
தீயும் காற்றும் சேர்ந்த வீரம்
சீறும் புலியின் பாயும் வேகம்
சிங்களமே நடுங்கும் தீரம்..
பேரம் பேசி முடக்க நினைத்தார்
ஒரு பேடியா இவன் அடங்கிப் போக..?
கோரம் காட்டி குதற முனந்தார்
ஒரு கோழையோ ஒதுங்கிப் போக?
நீசம் செய்த இனம் நடுங்க
நேசன் நிமிர்ந்து வந்தான்
விஸ்வரூம பொங்க...
பேசப் பேச இனியது தமிழ்..
இவனால்
இன்று உலகையே பேச வைத்தது
தமிழ்!

கூனிக் குறுகி இரோம் -இனி
இவன் கையில் கொடுத்தோம் எமை
கூடியொரு நாள் நாமும்
கும்மி கொட்டுவோம் எம் மண்ணில்
வீரன் பெற்ற விடுதலையை
குரவை கூட்டி பண்ணிசையில்..

அந்த நாளும் வாராதோ?
அக்கணம் வரை என்னுயிர் தரியாதோ?
சிந்திய என் சோதரர் குருதியின் ஈடாய்
எம் தேசத்தின் தலைவன் தரும் ஈழம்
இன்பமாய் ஒரு கணம் நுகர
அந்த நாளும் வாரதோ?
அக் கணம் வரை என்னுயிர் தரியாதோ?


*************************

எம் தாய்மண்ணின் மானம் காக்க களம் நடத்தும்
நம் தானைத் தலைவனுக்கு
என் மனம் குவிந்த , மனம் குளிர்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை
சமர்ப்பிக்கும் முகமாக 26.11.2007ல் எழுதப்பட்டது.

தேசக் குரலுக்கு ஓர் அஞ்சலி!

கோடி களில் தவழ்ந்திருக்கலாம் -
கோட்டு சூட்டோடு வாழ்ந்திருக்கலாம்.
சோடித்த கதை சொல்லி
செவ்வனவே...ஒரு தேசத்தில்
புகலிடமும் பிடித்திருக்கலாம்.
செய்தாயா நீ?

நூல்கள் எழுதின விரல்கள்
நூதனமாய் விளைந்த சிந்தனை துளிகள்.
ஆயுதங்கள் புழங்கிய கைகளுடன்
மிதவாதங்கள் புகுத்தப்பட்ட அறிவு புலனுடன்
சோதரனை நிமிர்த்திவிட்டாய்...!
புது வழியினை செப்பனிட்டாய்!
கடைசிவரை இருந்தாயா நீ?

நோயுடன் போராடினாய்.
ஒவ்வொரு தமிழனின் முதுகெலும்பிலும்
சுதந்திர கணத்தாக்கம்
தருவிக்கவும் போராடினாய்.
தடைகள் போட்ட எதிரியுடனும் போராட்டம்.
தமிழன் தகுதி உணர்த்த தரணி முழுவதுடனும் போராட்டம்..
தனித்து ஒரு நிமிடமேனும்
ஆசுவாசம் கண்டாயா நீ?

காதலுக்கு கட்டுண்ட கல்யாணமா?
கொள்கைகளால் கட்டப்பட்ட கல்யாணமா?
பாதிக்குப் பாதி உன் பாவையுமல்லவா
கை கோர்ர்த்தாள்..கதை எழுதினாள்....
பல்லக்கில் நீ புறப்பட்ட உலாவின் பின்
உன் பாரியாளின் தனிமைக்கேனும்
கொல்ல வந்த காலனிடம் கோவித்தாயா நீ?

மெல்லக் கண்மூடியதும் ஏன்?
மேதினியில் ஈழம் பார்க்க
மேல் உலகம் தான் வசதியோ?
சொல்லாமல் செல்கின்றாரே சோதரர்,
சேர்வையில் ஒன்றாக சேர்ந்தையோ?
பொல்லாத கோபம் அண்ணா உன்னுடன்
வெல்லாத இந்த நீசர்களுக்கு பதிலளிக்க
வேளைகளில் நீயில்லையென.!.
கல்லாகிப் போன காலனுக்கும் அறிவில்லை
கடைசி வரை இருந்தாயா நீ?

தேசத்தின் குரல் தேங்கி விட்டது.
எங்கள் குரல் நாண்களில் கேவல்கள் மட்டும் மிச்சமாய்..
ஆசுவாசம் கேட்கிறோம்;
ஆர்பரிக்கும் மன உளைச்சலிடம்..
நேசமான உன் முகம் மனதில்
நினைவுகளும் பொதி சுமைகள்
வீசிடும் தமிழ் காற்றில் விறைப்பாய் தெரிவதென்ன?
உன் மூச்சா?

திரிகள் அகல்களுக்குள் கட்டுண்டு...
ஜோதி மட்டும் வெளியில் பரவும்.
பூவுடல் மண்ணுக்குள் மட்டும்
பாலா அண்ணன் ஆத்துமா ஈழத்தின் வாய்மண்டல்த்துள்...
வானம் பார்த்த பூமியில் வாடிய பயிர்கள் நாம்
மாரி கொட்டும் எம் விழிகள்
மறைந்துவிட்ட சூரியனுக்காய்..
பாடல்கள் படையல் வைத்தோம்
தேசத்தின் குரலுக்காக...
கேட்கிறாதா சொர்க்கத்தில்....?


அண்ணாவுக்கு அஞ்சலிகள்...இலட்சங்களில் ஒன்றாக...இதுவும்.

தேசக் குரல் அண்ணன் பாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்காக எழுதியது.